தமிழ்நாடு

“பொது முடக்கம் மற்றும் போக்குவரத்து தடையை நீக்க வேண்டும்” : அ.தி.மு.க அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

தமிழ்நாட்டை விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமே இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. எனவே பொது முடக்கத்தை நீக்குங்கள்; போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

“பொது முடக்கம் மற்றும் போக்குவரத்து தடையை நீக்க வேண்டும்” : அ.தி.மு.க அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும்; அரசுப் பேருந்துகளை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 1 முதல் தொடரிகள் ஓடுவதற்கும் ஆவன செய்ய வேண்டும்; அயல்நாடுகளில் இருந்து வான் ஊர்திகள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

சமூக விலகலைக் கடைபிடித்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன். கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

“பொது முடக்கம் மற்றும் போக்குவரத்து தடையை நீக்க வேண்டும்” : அ.தி.மு.க அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், அவை போதுமானது இல்லை.

அதேவேளையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டது. அதனால் ஏழை எளிய அடித்தட்டுப் பொதுமக்கள் குடும்பங்களின் அமைதி பறிபோய்விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பெருகி வருகின்றன. மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தி, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த ஐந்து மாதங்களில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 47 லட்சம் பேருக்கு வழங்கவில்லை.

இதனால் பொதுமக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அவர்களுக்கு அந்தப் பாடத்தை படிப்பதற்கான கணினி, திறன் அலைபேசி வசதிகள் இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அரசு திறன் அலைபேசிகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

“பொது முடக்கம் மற்றும் போக்குவரத்து தடையை நீக்க வேண்டும்” : அ.தி.மு.க அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

அப்படி, தமிழக அரசும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அரசிடம் அதற்கான நிதி இல்லை கடந்த ஐந்து மாதங்களில் தமிழக அரசின் நிதி நிலை சீரழிந்து விட்டது அரசு திவால் ஆகும் நிலையில் இருக்கின்றது.

கர்நாடக அரசு அனைத்துத் தடைகளையும் விலக்கிக் கொண்டு விட்டது. நடுவண் அரசு கேட்டுக் கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு தனது எல்லைகளைத் திறந்து விட்டது. தமிழ்நாட்டை விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்லியில், ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது.

எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும்; அரசுப் பேருந்துகளை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும்; செப்டம்பர் 1 முதல் தொடரிகள் ஓடுவதற்கும் ஆவன செய்ய வேண்டும்; அயல்நாடுகளில் இருந்து வான் ஊர்திகள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories