
மத்திய கிழக்கில் நிலவி வரும் இந்தப் போர்ச்சூழல் காரணமாக இந்தியாவில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.
மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. போர் இன்னும் முடிவுக்கு வராததால் எல்.பி.ஜி தட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,
”டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100-ஐ நோக்கி வீழ்ச்சியடைவதும், தொழில்சாலைகளுக்கான எரிபொருள் விலை கடுமையாக உயர்வதும் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; இவை வரப்போகும் பெரும் பணவீக்கத்திற்கான தெளிவான அறிகுறிகள்.
உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும்.
அந்நிய நிறுவன முதலீடுகள் வேகமாக வெளியேறும், இதனால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்படும்.
அதாவது, ஒவ்வொரு குடும்பத்தின் நிதிநிலையிலும் இதன் நேரடித் தாக்கம் இருக்கும். 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்படுவது உறுதி.
மோடி அரசிடம் முறையான திட்டமோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை - வெறும் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன" என தெரிவித்துள்ளார்.






