தமிழ்நாடு

ரேஷன் பொருட்கள் மட்டுமே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமா? - அதிமுக அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!

வெளிமாநிலங்களில் வேலை இழந்து 8.19 சதவிகிதத்தினர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களும் வருமானம் இன்றி வறுமையில் வாடிக் கொண்டிக்கின்றனர்.

ரேஷன் பொருட்கள் மட்டுமே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமா? - அதிமுக அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக மக்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கு இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதாக அந்த தளர்வுகள் இல்லை.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர். பல குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் எந்த திட்டமும் தமிழக அரசிடம் இல்லை.

கடந்த மார்ச்-மே மாதங்களில் 53 சதவிகித குடும்பத்தினரில், குறைந்தது ஒருவராவது வேலை இழந்துள்ளதாக, தமிழக அரசு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ரேஷன் பொருட்கள் மட்டுமே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமா? - அதிமுக அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!

ஊரடங்கால் நகர்ப்புறத்தினர் 50 சதவிகிதத்தினரும், கிராமப்புறத்தில் 56 சதவிகிதத்தினரும் வேலை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 53 சதவீத குடும்பத்தில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 3 மாத காலத்தில், கிராமப்புறத்தில் 92 சதவிகித குடும்பத்திலும், நகர்ப்புறத்தில் 95 சதவிகித குடும்பத்திலும் ஒன்றிலிருந்து இரண்டு பேர் வரை வேலை இழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள 8 சதவிகித கிராமப்புற குடும்பங்களிலும், 5 சதவிகித நகர்ப்புற குடும்பங்களிலும் 3 முதல் 5 பேர் வரை வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் அந்த கணக்கெடுப்பு கூறுகிறது.

வேலை இழந்தோரில் 83.4 சதவிகிதத்தினர் அன்றாடக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். 13.3 சதவிகித குடும்பங்களில் வேலை இழந்தோர் தனியார் துறைகளில் பணி புரிந்தவர்களாக உள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஊரடங்குக்கு முன்பு 37 சதவிகித கிராமப்பற குடும்பத்தினர் பணியாற்றினர். இவர்களில் மூன்றில் 2 சதவிகிதத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்கு திரும்பினர். ஆனால், 1 சதவிகிதத்தினர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக 67 சதவிகித தமிழக குடும்பத்தினர் வருவாயை இழந்துள்ளனர். கிராமப் புறங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 11,472 ஆக இருந்த சராசரி வருமானம், மே மாதத்தில் ரூபாய் 6,522 ஆக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் கடந்த பிப்ரவரி மாதம் ரூபாய் 17,717 ஆக இருந்த சராசரி குடும்ப வருமானம், மே மாதத்தில் ரூபாய் 11 ஆயிரத்து 337 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம் தான் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இங்கு 67 சதவிகித குடும்பத்தினர் வேலை இழந்துள்ளனர். வெளிமாநிலங்களில் வேலை இழந்து 8.19 சதவிகிதத்தினர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களும் வருமானம் இன்றி வறுமையில் வாடிக் கொண்டிக்கின்றனர்.

இத்தகைய புள்ளிவிவரங்கள் தமிழக மக்களின் நிலைகுலைந்து போன வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளன. இவர்களுடைய வாழ்க்கை பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதற்காக ஏதும் நிதி ஒதுக்கப்பட்டதா? விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 2 ஆயிரம் உதவியும், மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் பொருட்களும் அவர்களது வாழ்வாதாரத்துக்கு போதுமானதா? என்பது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

மேலும், பொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில், தொடங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories