தமிழ்நாடு

“OBC இடஒதுக்கீடு தீர்ப்பு - தமிழ்நாடு பெரியார் மண்தான் என்பது மீண்டும் நிரூபணம்” - கி.வீரமணி பெருமிதம்!

மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

“OBC இடஒதுக்கீடு தீர்ப்பு - தமிழ்நாடு பெரியார் மண்தான் என்பது மீண்டும் நிரூபணம்” - கி.வீரமணி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றும், விரைந்து அந்தத் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!

மருத்துவக் கல்வியில், மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் எம்.பி.பி.எஸ். போன்ற பட்டப் படிப்புகளுக்கு 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேல்பட்டப் படிப்பிற்கு (எம்.டி., எம்.எஸ். போன்றவைகள்) 50 சதவிகித இடங்களும் அளிக்கும் திட்டத்தில், ஏற்கெனவே உள்ள மாநில சட்டப்படியும், ‘நீட்’ தேர்வினை நடத்தும் மெடிக்கல் கவுன்சில் தனது ஒழுங்குமுறை ஆணை அடிப்படையிலும், தரவேண்டிய இட ஒதுக்கீட்டை கடந்த பல ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டடோருக்குத் தராமலே ‘நீட்’ ஆரம்பித்த கடந்த மூன்று ஆண்டுகளாக - O.B.C. என்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பூஜ்ய இட ஒதுக்கீடே என்ற நிலையை எதிர்த்து நமது இயக்கமும், ‘விடுதலை’யும் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததோடு, இது சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கும் உரிமை - அரசமைப்புச் சட்டப்படியும்கூட என்பதைச் சுட்டிக்காட்டி, சமூகநீதி மண்ணான தமிழ்நாடு இதற்கான சட்டப் போராட்டக்களத்தில் (முதற்கட்டமாக) இறங்கி நீதி கேட்கவேண்டும் என்று அனைத்துக் கட்சி, தலைவர்களும் கேட்டுக் கொண்டதை ஏற்றுக்கொண்டனர். திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ‘ரிட்’ (Writ of Mandamus) வழக்கும் தொடுத்தோம்!

திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றத்தில் முன்னோடியாகச் சென்று வழக்குத் தொடர்ந்தது; அதனையொட்டி மற்ற அரசியல் கட்சிகளான ம.தி.மு.க., தமிழ்நாடு காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றோடு தமிழ்நாடு அரசும் சமூகநீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தன.

உச்சநீதிமன்றத்தில் அந்தக் கட்டத்தில் இதனை ஏற்க மறுத்து, உயர்நீதிமன்றத்திற்கே நீங்கள் செல்லுங்கள் என்று கூறி, மனுக்களை ‘டிஸ்மிஸ்’ செய்ய ஆயத்தமான நிலையில், அனைவரும் மனுக்களைத் திரும்பப் பெற்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்து, மூத்த வழக்குரைஞர்களும், அரசின் தலைமை வழக்குரைஞரும் சிறப்பாக வாதாடினர்.

“OBC இடஒதுக்கீடு தீர்ப்பு - தமிழ்நாடு பெரியார் மண்தான் என்பது மீண்டும் நிரூபணம்” - கி.வீரமணி பெருமிதம்!

எதிர்வாதங்களை வைத்தனர்!

மத்திய அரசின் சுகாதாரத்துறை, மெடிக்கல் கவுன்சில் சார்பாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும், 50 விழுக்காட்டிற்கு மேலே செல்வதால் செயல்படுத்த முடியாது என்றும், உச்சநீதிமன்றம்தான் இது சம்பந்தமாக முடிவு செய்யும் அதிகாரம் படைத்தது என்றும், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே சலோனிகுமாரி வழக்கு என்ற பிற்படுத்தப்பட்டவரின் வழக்கு விசாரணையில் இருப்பதால், அதன் முடிவுக்குப் பிறகே இதுபற்றி எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றும் பல எதிர்வாதங்களை வைத்தனர்.

உயர்நீதிமன்றத்தின் விசாரணையைத் தடுக்கும் வகையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் விசாரித்துத் தீர்ப்பளிக்கக் கூடாது என்பதாகவும் மத்திய அரசு துறைகள் சார்பாக, மெடிக்கல் கவுன்சில் சார்பாக வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

உடனே தி.மு.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஆர்.வில்சன், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே இது சம்பந்தமாக மாணவர் ஒருவர் சார்பாக போட்டிருந்த வழக்கு விசாரணையில், இதைக் கூறியவுடன், ‘‘உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளைத் தொடர்ந்து விசாரிக்க எந்த ஆட்சேபணையும் இல்லை’’ என்று தெளிவுபடுத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ஏ.பி.சாஹி, ஜஸ்டீஸ் செந்தில்குமார், ஜஸ்டீஸ் இராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த இடஒதுக்கீட்டு வழக்கினை விசாரணைக்கு எடுத்து, தொடர்ந்து பல மணிநேர வாதங்களை அனுமதித்துக் கேட்டு, காலம் தாழ்த்தாமல், 27ஆம் தேதி தீர்ப்பு என்றும் அறிவித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

நேற்று (27.7.2020) தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் தீர்ப்பு வெளிவந்தது. 171 பக்கங்கள் கொண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில்,

மத்திய அரசின் சுகாதாரத்துறை, இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பாக தெரிவித்த எதிர்தரப்பு வாதங்களை இந்நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே மாநில அரசின் 69 சதவிகித சட்டம் அமலில் இருப்பதால் ளிஙிசி என்ற பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையைப் புறந்தள்ள முடியாது என்றும்,

“OBC இடஒதுக்கீடு தீர்ப்பு - தமிழ்நாடு பெரியார் மண்தான் என்பது மீண்டும் நிரூபணம்” - கி.வீரமணி பெருமிதம்!

உச்சநீதிமன்றம்தான் இட ஒதுக்கீடு சம்பந்தமாக முடிவு செய்ய முடியும் என்ற மத்திய அரசு துறைகளின் வாதங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்றும், ஏற்கெனவே ‘நீட்’ தேர்வில், இட ஒதுக்கீடு - மெடிக்கல் கவுன்சில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அபயநாத் வழக்கு போன்றவற்றிலும், ராஜேஸ்வரன், ஜெயக்குமார் வழக்குகளிலும், அபயநாத் வழக்குகளிலும் முன்பு அளித்துள்ளதைச் சுட்டிக் காட்டியும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தர அரசமைப்புச் சட்டப்படியும் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பு கூறினர்- இது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்!

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்னொரு முக்கிய கருத்தைத் தெளிவுபடுத்தி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை மறுக்கப்பட முடியாத ஒன்று என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டிருக்கிறது!

இது சம்பந்தமாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல வந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15 விழுக்காடு, 7.5 விழுக்காடு, உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு (ணிகீஷி) 10 விழுக்காடு, மாற்றுத் திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு என்று வரும் போது மொத்தக் கூட்டலில், 50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பது - இனி எடுபடக் கூடிய வாதமாகாது என்பது தெளிவாகி விட்டது.

காலதாமதம் செய்யாமல்...

இத்தீர்ப்பின்படி, மத்திய அரசு, மூன்று மாதத்திற்குள் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சம்பந்தமாக ஒரு கமிட்டி அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்பதும், இவ்வாண்டு இதன் பலன் கிடைக்காது என்பதும்கூட இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சமூகநீதியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மனம் வைத்தால், ஒரு வாரத்திற்குள் செய்ய முடியும் என்பதை 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் வரலாறே நன்கு உணர்த்தும். எனவே, காலதாமதம் செய்யாமல், அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்க முன்வரவேண்டும்!

பாராட்டி வரவேற்கிறோம்!

சென்னை உயர்நீதிமன்றம், அதன் முதல் அமர்வில் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க, சமூகநீதியின் மைல்கல் போன்ற இந்தத் தீர்ப்பு அந்நீதிபதிகளின் ஆழ்ந்த சட்டப் புலமைக்கும், சமூகநீதியின்பால் உள்ள நியாயங்களின் நேர்மையையும் சட்டப்படி விளக்கியிருக்கிறது. இத்தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறோம்.

இனி, பந்து மத்திய அரசிடம்தான் இருக்கிறது.

காலந்தாழ்த்தாமல் - மீண்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு உரிய நீதி - சமூகநீதி கிடைக்கச் செய்ய உடனடியாக செயல் வடிவம் கொடுக்கவேண்டும்.

உயர்நீதிமன்றம் கொடுத்த மூன்று மாத அவகாசம் என்பது உச்ச வரம்புதானே தவிர, அதற்குள் வினையாற்ற எந்தத் தடையுமில்லை என்பதையும் புரிந்துகொண்டு, மத்திய அரசு செயல்படுவதே உண்மையான மக்களாட்சிக்கு சரியான அடையாளம் ஆகும்.

மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது!

தமிழ்நாடு பெரியார் மண்தான் என்றும், சமூக நீதிக்கான இந்தியாவிற்கே வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம் தரும் மண்தான் என்பது இதன்மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்காக நம்மைப் போல வழக்குத் தொடுத்த எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைவருக்கும் நமது பாராட்டுகள்!

இதற்காக நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர்கள் உள்பட அனைத்து வழக்குரைஞர் பெருமக்களுக்கும் நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டும், நன்றியும்!

சமூகநீதிக் கொடி எக்காரணத்தை முன்னிட்டும் தலைதாழ விடமாட்டோம்! சமூகநீதி வெளிச்சமும், சமூகநீதிக்கான உரிமைக் குரலும் இனி நாடெங்கும் பரவும், கேட்கும் என்பதும் உறுதி! உறுதி!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories