தமிழ்நாடு

11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி!

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் சபாநாயகர் விரைந்து செயல்பட்டு முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க., தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில், தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அத்துடன் வழக்கு விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories