தமிழ்நாடு

3 பேர் 100 பைக்குகள் - போலிசுக்கு தண்ணி காட்டிய திருட்டு கும்பல் சென்னையில் சிக்கியது!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி வந்த மூவரை சிசிடிவி உதவியுடன் கண்காணித்து காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

3 பேர் 100 பைக்குகள் - போலிசுக்கு தண்ணி காட்டிய திருட்டு கும்பல் சென்னையில் சிக்கியது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையின் பெரம்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து உதவி ஆணையர் மகேஷ்வரி தலைமையிலான காவல்துறையினர் இது தொடர்பாக சி.சி.டி.வி காட்சியுடன் விசாரிக்க தொடங்கினர்.

விசாரணையில் 3 பேர் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் கடந்த ஓர் ஆண்டாக காவல்துறையினருக்கு பிடிகொடுக்காமல் அவர்கள் மூவரும் தப்பித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு புரசைவாக்கம் பகுதியை அடுத்த டவுட்டன் பாலத்திற்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருட முயன்றபோது அம்மூவரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

3 பேர் 100 பைக்குகள் - போலிசுக்கு தண்ணி காட்டிய திருட்டு கும்பல் சென்னையில் சிக்கியது!

அதன் பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில் அம்மூவரும் திருமழிசையைச் சேர்ந்த தமிழ்வாணன், அம்பத்தூரைச் சேர்ந்த சாமுவேல் மற்றும் கள்ளிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மூவரும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை வேப்பேரி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories