பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் நீங்கலாக இந்தியாவில் குடியேறுவோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ள பா.ஜ.கவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எதிர்க்கட்சிகள், கல்லூரி மாணவர்கள், மாநில முதலமைச்சர்கள் என பலரும் இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்தப் போராட்டத்தை அடக்கும் வகையில் மத்திய அரசே சமூக விரோதிகளை ஏவி வன்முறையை ஏற்படுத்தி வருவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அண்மையில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸார் நடத்திய தாக்குதல் நாடெங்கும் உள்ள கல்லூரி மாணவர்களை கோபத்திற்கு ஆளாக்கியது. இதனால் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு தொடங்கி பல்வேறு வகையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த போலிஸாருக்கு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள், வெளிமாநிலத்தவர்கள் என எவரேனும் குவிந்திருந்தால் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிமைக்காக அமைதி வழியில் போராடும் மாணவர்கள், அரசியல் கட்சியினரின் போராட்டத்தை ஒடுக்கவும், வன்முறையை கட்டவிழ்த்துவிடவும் போலிஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக கண்டனம் எழுந்துள்ளது.