தமிழ்நாடு

மாணவி பாத்திமா பலி : “கொலை வழக்காகவே பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!

மாணவ மாணவிகள் சாதி மதரீதியான நெருக்கடிகளுக்கும் மனஅழுத்தத்திற்கும் ஆளாகாமல் கல்வி கற்கும் வகையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.

மாணவி பாத்திமா பலி : “கொலை வழக்காகவே பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மாணவி பாத்திமா தற்கொலையை கொலை வழக்காகவே பதிவு செய்து மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னையில் உள்ள தொழில்நுட்பக்கல்வி நிறுவனமான ‘ஐஐடி’ யில் முதுகலை வகுப்பில் முதலாமாண்டு பயின்று வந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த இஸ்லாமிய மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த நவம்பர்-9 அன்று தனது விடுதி அறையில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டார் என்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

அவர், “ தனது சாவுக்குத் தனது பேராசிரியர் ஒருவரே காரணம்” என்று பெயரைக் குறிப்பிட்டுள்ள ‘தற்கொலைக் குறிப்பை’க் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இது மேலும் கூடுதல் அதிர்ச்சியை அளிப்பதாகவுள்ளது.

மாணவி பாத்திமா பலி : “கொலை வழக்காகவே பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!

ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற அவலங்கள் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, தலித் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் ரோஹித்வெமுலா, முத்துக்கிருஷ்ணன் போன்றவர்களின் வரிசையில் தற்போது இஸ்லாமிய மாணவி ஃபாத்திமாவும் பலியாகியுள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் சனாதன சக்திகளின் வெறுப்பு அணுகுமுறைகள் தான் இத்தகைய பலிகளுக்குக் காரணமாகவுள்ளன. மாணவி ஃபாத்திமா, பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மில்ந்த் பிராமே, ஹேமச்சந்திரா காரா ஆகிய மூவரையும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனவே , இதனை தற்கொலை எனக் கருதாமல் நிறுவனக் கொலையாகவே (Institutional Murder) கருத வேண்டியிருக்கிறது. ஆகவே, இதனை கொலை வழக்காகவே பதிவு செய்து மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்.

மாணவி பாத்திமா பலி : “கொலை வழக்காகவே பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!

உயர்கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடும் சாதி-மதவெறி வன்கொடுமைகளால் மாணவ மாணவியரின் தற்கொலைகள் தொடர்கின்றன. இந்நிலையில் இத்தகைய தற்கொலைகளுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் கமிஷன் அமைத்திட வேண்டுமென மைய அரசை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

கல்வி நிறுவனங்களில் தலித், பழங்குடியினர் , பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவர்களின் மீது நிகழ்த்தப்படும் சாதி மதரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாணவ மாணவிகள் சாதி மதரீதியான நெருக்கடிகளுக்கும் மனஅழுத்தத்திற்கும் ஆளாகாமல் கல்வி கற்கும் வகையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.

மாணவி ஃபாத்திமா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பலியான மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக மைய அரசு ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories