கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி கடந்த 80 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. ஆனால், மீட்புப் பணிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
நேற்று (அக்.,28) இரவு 10.30 மணிவரை சுமார் 65 அடி ஆழம் தோண்டப்பட்ட பள்ளம் அதன் பிறகு நிறுத்தப்பட்டது. பாறையின் தன்மை குறித்து அறிவதற்காக தீயணைப்பு வீரர்கள் உள்ளேச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளத்திற்கு அடியில் இருந்து துர்நாற்றம் வந்ததுள்ளது.
இதனையடுத்து, ரிக் இயந்திரத்தைக் கொண்டு மேலும் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 65 அடி ஆழத்துக்கு பக்கவாட்டில் இடுக்கி போன்ற கருவிகளைக் கொண்டு துளையிட்டு சிறுவன் சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் மீட்கப்பட்டது. இதனையடுத்து, குழந்தை உயிரிழந்துவிட்டான் என்பதை வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுர்ஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக குழந்தை வைக்கப்பட்டு மணப்பாறை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தின் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுர்ஜித்தின் கல்லறையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுஜித்தின் தாய் கலாமேரி கூறுகையில், "ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் தொடர கூடாது. எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும். சுஜித் தவறி விழுந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை.
தங்களால் இயன்ற அளவிற்கு சுஜித்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக முதல்வர் ஆறுதல் கூறினார். மீட்பு பணிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. எனது மகனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என தெரிவித்துள்ளார்.