தமிழ்நாடு

“இந்தியை மீண்டும் திணிப்பவர்களுக்கு அடி விழும்” - சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ரா!

இந்தியை மீண்டும் திணிக்க வந்தால் திணிப்பவர்களுக்கு நாலு அடி விழும் என்று சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ரா தெரிவித்துள்ளார். 

“இந்தியை மீண்டும் திணிப்பவர்களுக்கு அடி விழும்” - சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ரா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 97 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட எழுத்தாளர் கி.ரா பேசியதாவது :

பேச்சுத்தமிழ் தான் மொழியின் ஆதாரம். அதைப் புறந்தள்ள முடியாது. தமிழ் இன்றைக்கும் கன்னித் தன்மையைக் கொண்டது. ஹீப்ரூ, லத்தீன் போன்ற பழைய மொழிகள் அழிந்த பின்னும் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் தாலாட்டு, ஒப்பாரி ஆகியன கிடையாது. தமிழ் மொழியின் இயல்புகள் சமஸ்கிருதத்தில் கிடையாது.

அதைக் கொண்டாடும் போது நாம் தமிழை உச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டாமா? பேச்சுத் தமிழும், வழக்குச் சொற்களும் எல்லா மொழிகளிலும் உண்டு; அதைத் தொடர்ந்து பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை. சந்தன மரம் வளர வேண்டுமென்றால் வேறு மரங்கள் பக்கத்தில் வளர வேண்டும். புலமைப்பித்தன் சொல்வார். எந்த மொழியையும் யாராலும் அழிக்க முடியாது.அதைப் பேசுபவர்களால் தான் அதற்கு பாதகம் ஏற்படும்.

நரிக்குறவர்களில் ஒருவர் இருந்தாலும், அவர்கள் பேசும் பாஷைகள் இருந்துகொண்டு தான் இருக்கும். மொழிக்கு இறுதி கிடையாது. மனிதர்கள் வருவார்கள், போவார்கள். மானுடமும், மொழியும் என்றும் நிரந்தரமானவை. அதைப் பாதுகாப்பதன் பொறுப்பு அந்தந்த மொழியைப் பேசுபவர்களின் கைகளில் தான் உள்ளது.

உலகில் இதுவரை ஆயிரக்கணக்கான மொழிகள் அழிந்துள்ளதாக தகவல். நாட்டுப்புறவியலையும், பண்பாட்டையும் சிலர் கவனிக்கத் தவறுகின்றனர். ஒவ்வொரு மண்ணின் இயல்பு, மண்வாசனை, கலாச்சாரம், வழக்காறு ஆகியவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதென்பது தங்களது பிள்ளைகளை பாதுகாப்பது போன்று தார்மீக பொறுப்பாக ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு.” இவ்வாறு அவர் கூறினார்.

“இந்தியை மீண்டும் திணிப்பவர்களுக்கு அடி விழும்” - சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ரா!

இதையடுத்து, நிகழ்ச்சியில், தற்போது இந்தியாவின் அடையாளமாக இந்தி மொழி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்தாளர் கி.ரா பதிலளித்துப் பேசியதாவது:-

"இவ்விஷயத்தில் கருத்தே தேவையில்லை. அது அவருடைய கருத்து. அதை நாம் கட்டாயம் கேட்கவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அவர் கருத்து அவருடையது. நம் கருத்து நம்முடையது. மொழியைத் திணிக்க முடியாது. ஏற்கெனவே திணிக்க முயன்று இங்கு அடி வாங்கியுள்ளனர். மீண்டும் திணிக்க வந்தால் கூடுதலாக நான்கு அடிதான் கிடைக்கும். எக்கருத்துமே மாறிக்கொண்டே இருக்கும். உண்மையில் இவ்விஷயத்தில் நாம் பேசாமல் இருந்தாலே பெரிய அடியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories