முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் கைதிகளாக சிறைகளில் உள்ளனர்.
இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி தமிழக ஆளுநருக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள் ஆறு மாதங்கள் ஆகியும் பரிசீலிக்கப்படாமல் அப்படியே உள்ளது.
29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம்மாள் தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அற்புதம்மாள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #29YearsTooMuchGovernor என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘ அமைச்சரவை பரிந்துரைத்து 1 ஆண்டு. நிரபராதி, விடுதலை செய்யவேண்டும் என சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரே! 29 வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்!’ என்று தெரித்துள்ளார். அவரின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.