தமிழ்நாடு

பிரிவினை பேசும் ஹெச்.ராஜா எங்கள் ஊருக்குள் வர வேண்டாம் : தி.மு.க - அ.தி.மு.க - ஊர்ப்பொதுமக்கள் எதிர்ப்பு

“ஹெச்.ராஜா வந்தால் கிராமத்தில் மோதல் உருவாகும். இந்து அதர்ம கொள்கைவாதி ஹெச்.ராஜா கிராமத்திற்குள் வரக்கூடாது” - கிராம மக்கள் போராட்டம்! 

பிரிவினை பேசும் ஹெச்.ராஜா எங்கள் ஊருக்குள் வர வேண்டாம் : தி.மு.க - அ.தி.மு.க - ஊர்ப்பொதுமக்கள் எதிர்ப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடலூர் மாவட்டம் அரியநாச்சி குடிக்காடு கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வந்த பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி குடிக்காட்டில் பழமையான கோவில் ஒன்றைப் புதுப்பிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருபிரிவினரிடையே பிரச்னை நிலவி வருகிறது. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் அந்த கிராமத்திற்கு வந்த ஹெச்.ராஜா, ஒரு தரப்புக்கு ஆதரவாகப் பேசி பதற்றத்தை உருவாக்கினார். இந்நிலையில், அங்கு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஹெச்.ராஜா கலந்துகொள்வதாக இருந்தது. இதையொட்டி பா.ஜ.கவினர், ஹெச்.ராஜாவை வரவேற்று பேனர்கள் வைத்தனர்.

பிரிவினை பேசும் ஹெச்.ராஜா எங்கள் ஊருக்குள் வர வேண்டாம் : தி.மு.க - அ.தி.மு.க - ஊர்ப்பொதுமக்கள் எதிர்ப்பு

ஹெச்.ராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க, தி.மு.க பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் “ஹெச்.ராஜா வந்தால் கிராமத்தில் மோதல் உருவாகும். இந்து அதர்ம கொள்கைவாதி ஹெச்.ராஜா கிராமத்திற்குள் வரக்கூடாது” என சுவரொட்டிகள் ஒட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று மாலை ஹெச்.ராஜா அரியநாச்சி கிராமத்திற்கு காரில் வந்தார். இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் மாரியம்மன் கோவில் அருகே கருப்புக் கொடிகளுடன் திரண்டு, அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.

தகவலறிந்து சென்ற வேப்பூர் போலிஸார் மக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மக்கள், ஹெச்.ராஜாவை கிராமத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து போலிஸார் ஹெச்.ராஜாவிடம் நிலைமையை எடுத்துக் கூறிய பிறகும் அவர் தொடர்ந்து காரில் இருந்து இறங்கி கோவிலுக்குச் செல்ல முற்பட்டார். கிராம மக்கள் கருப்பு கொடிகாட்டி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து காரில் திரும்பிச் சென்றார்.

பா.ஜ.க-வினர் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் ஊடுருவி மதரீதியிலான விவகாரங்களின் மூலம் வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருகின்றனர். அதன் ஒரு முயற்சியை கிராம மக்களில் ஒரு பிரிவினரே எதிர்த்துக் குரல் எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories