தமிழ்நாடு

அரசின் அலட்சியத்தால் கருகிய மலர்களுக்கு கண்ணீர் அஞ்சலி: கும்பகோணம் தீ விபத்து 15ம் ஆண்டு நினைவு தினம் !

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 15வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தின அனுசரிப்பில் 94 குழந்தைகளின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அரசின் அலட்சியத்தால் கருகிய மலர்களுக்கு கண்ணீர் அஞ்சலி: கும்பகோணம்  தீ விபத்து 15ம் ஆண்டு நினைவு தினம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பள்ளி நடந்து கொண்டிருந்தபோதே தீ விபத்து ஏற்பட்டது. பள்ளியின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் தீ பற்றியது. பள்ளியின் படிக்கட்டுகள் குறுகியிருந்ததால் தீயில் சிக்கி தப்பிக்க முடியாமல் 94 பிஞ்சுகள் தீயில் கருகி கரிக்கட்டைகளாகினர். அந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

தனியார் பள்ளியின் லாபவெறி அலட்சியத்தால் பல லட்சிய கனவுகளுடன் பிள்ளைகளை வளர்த்தப் பெற்றோர்கள் உருக்குலைந்து போனார்கள். அன்றில் இருந்து இன்றுவரை அவர்கள் மீளாத துயரத்தில் தவித்து வருகின்றனர். ஜூலை 16ம் தேதி வந்தால் மட்டுமே, கும்பகோணம் பள்ளி தீ விபத்து குறித்து இந்த ஆட்சியாளர்களுக்கு நினைவு வரும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தக் கோரிக்கை இன்னுமும் நிறைவேறவில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

15 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் அந்த ரணம் ஏற்படுத்திய வடுவும், வலியும் மாறாமல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் பிள்ளைகளை பறிக்கொடுத்தவர்கள் கடும் துயரத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். இந்தாண்டும் விழிகளில் பெருக்கெடுக்கும் கண்ணீருடன் பெற்றோரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசின் அலட்சியத்தால் கருகிய மலர்களுக்கு கண்ணீர் அஞ்சலி: கும்பகோணம்  தீ விபத்து 15ம் ஆண்டு நினைவு தினம் !

அதுமட்டுமின்றி 94 உயிர்கள் பலியானதற்கு மிக முக்கிய காரணம் பள்ளி நிர்வாகம் தான். போலி ஆவணங்கள் மூலம் அனுமதி பெற்று மாணவர் சேர்க்கை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிகமான மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் எளிதில் தீ பற்றக்கூடிய வகையில் குடிசை அமைத்ததும், சமைப்பதற்கு தேவையான விறகுகளை பள்ளிக்கட்டிடத்திலேயே அனுமதித்ததன் விளைவே இந்த கோர விபத்துக்கு காரணம்.

மேலும் இதை குறிப்பிட்டு நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் குற்றவாளிகள் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்ற வழங்கி இருக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மேலும் பெற்றோர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசின் அலட்சியத்தால் கருகிய மலர்களுக்கு கண்ணீர் அஞ்சலி: கும்பகோணம்  தீ விபத்து 15ம் ஆண்டு நினைவு தினம் !

இறந்த உயிர்களுக்கும், பெற்றோரின் இழப்புக்கும் நீதி எள்ளளவும் கிடைக்கவில்லை. பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும், சரியான வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று சொன்னது வெறும் பெயரளவில் தான் உள்ளது. இன்னமும் தமிழ்நாட்டில் அனுமதி பெறாத பள்ளிகள் போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன. ஆனால், அதுபற்றி இந்த ஆட்சியாளர்கள் எப்போதும் கவலைப்பட்டதே இல்லை.

இந்நிலையில், இன்று பொதுமக்களும் பெற்றோரும், பள்ளியின் நினைவு வளாகத்தில் மலர்களைத்துாவியும், குழந்தைகளின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மெழுகுவர்த்தி ஏந்தியும் குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும் மாணவர் சங்கத்தினர் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள். மாநிலத்தில் பல இடங்களில் மாணவ அமைப்பினர் இந்த நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

இதனிடையே அஞ்சலி செலுத்த வந்தவர்கள், ஜூலை 16ம் தேதியை பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories