
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் அடிப்படை வசதியில்லாமல் தினந்தோறும் அவதியுற்று வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தால் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே மாநில தேர்தல் ஆணையத்தை தனது கைக்குள் போட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுத்து வருகிறது எடப்பாடியின் அ.தி.மு.க. அரசு.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை அடுக்கியுள்ளது.
அதில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பணிகள் எப்போது முடிவடையும்? தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தாமதம் ஏன்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து பேசிய அரசு தரப்பு, உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு தாமதமாவதால் தனி அதிகாரிகளுக்கான பதவிக்காலத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. மேலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தான் முடிவடையும் என்பதால் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக வரும் ஜூலை 17ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முன்னதாக, செப்டம்பர் மாதத்திற்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.








