தமிழ்நாடு

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது : வைகோ வலியுறுத்தல்!

மேகதாது அணைகட்ட அனுமதி அளிக்க முனைந்திருப்பது தமிழகத்தை பாலைவனமாக்கும் வஞ்சக நோக்கம். எனவே மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது என வைகோ வலிறுத்தியுள்ளார்.

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது : வைகோ வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற பகுதியில் அணை கட்ட தொடர்ந்து தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கை விடுத்து, மத்திய அரசிடம் கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு நிலம் அளக்கப்பட்டபோதே பல எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் அணையைக் கட்ட கர்நாடக அரசு மீண்டும் முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் அவர் தெரிவித்ததாவது, "காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கீழ் படுகை மாநிலங்களின் அனுமதியைப் பெறாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்பதையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் அலட்சியப்படுத்தி, மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டியே தீருவது என கர்நாடகா முனைப்புடன் செயல்படுகிறது.

மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்குமாறு மத்திய அரசின் நீர்வளத்துறை, வனத்துறை ஆகியவற்றிடம் 2018 செப்டம்பர் மாதம், கர்நாடக அரசு செயல்திட்ட வரைவு அறிக்கை மற்றும் கோரிக்கை மனுவை அளித்தது. இதில் மேகேதாட்டுவில் ரூ.5912 கோடியில் அணையும், சுமார் 400 மெகாவாட் திறன்கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அமைப்பதற்கான திட்ட வரைவு மத்திய அரசிடம் அளித்தது கர்நாடகம். இதனை ஏற்றுக்கொண்ட மத்திய நீர் வளக் குழுமம் நவம்பர் 22, 2018 இல் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு அனுமதியை கர்நாடகாவுக்கு வழங்கியது.

இதன்பின்னர் டெல்லியில் 2018, டிசம்பர் 3 இல் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய நீர்வளத்துறை மற்றும் வனத்துறை வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், அணைக் கட்டுமானப் பகுதியை நிபுணர் குழுவுடன் சென்று பார்வையிட்டு அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக இருக்கிறது என்றார்.

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது : வைகோ வலியுறுத்தல்!

கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைகள் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்த தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை டிசம்பர் 5, 2018 இல் கர்நாடகா மாநிலம் மீது தமிழக அரசு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி கர்நாடக அரசு, கர்நாடகாவின் வறட்சியை சமாளிக்கவும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

மேகேதாட்டு அணை திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.9 ஆயிரம் கோடி என்றும். 400 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட வேண்டும். நான்கு ஆண்டுகளுக்குள் அணை கட்டுமானம் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கர்நாடகம் தெரிவித்து உள்ளது.

மேலும் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு 5252 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். இதில் 4996 ஹெக்டேர் நிலம் நீருக்குள் மூழ்கும். 3181 ஹெக்டேர் நிலம் காவிரி வன உயிர் சரணாலயத்திற்கு உட்பட்டது. 1869 ஹெக்டேர் நிலம் காப்புக் காடுகள் என்றும் கர்நாடக மாநில அரசு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டு அனுமதி கேட்டுள்ளது.

மேகேதாட்டு அணை கட்ட 5912 கோடி ரூபாய் ஒதுக்கிய கர்நாடகா தற்போது அதனை 9 ஆயிரம் கோடியாக திட்ட மதிப்பீட்டை உயர்த்தி இருப்பது இந்த அணையின் மூலம் பாசனப் பரப்பை அதிகரிக்கவும், நீர் பிடிப்புப் பகுதிகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு இருப்பதையே காட்டுகிறது.

மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுவிடும். உபரி நீர் கூட மேட்டூருக்கு வரக்கூடாது என்பதில் கர்நாடகா மாநிலம் மூர்க்கத்தனமாக செய்யப்படுவது கண்டனத்துக்கு உரியது.

மக்கள் எதிர்ப்புகளை மீறி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, தற்போது மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க முனைந்திருப்பது தமிழகத்தைப் பாலைவனமாக்கும் வஞ்சக நோக்கம் ஆகும். மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளிக்கக் கூடாது. கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories