தமிழ்நாடு

சதுப்பு நிலங்களில் கட்டுமானப்பணிக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ! 

வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டவும், தமிழ்நாடு இசை பல்கலைக் கழகம் கட்டவும், பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களை ஒதுக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்.

சதுப்பு நிலங்களில் கட்டுமானப்பணிக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சோழிங்கநல்லூர், ஒக்கியம் - துரைப்பாக்கம் பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களை, வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டவும், தமிழ்நாடு இசை பல்கலைக் கழகம் அமைக்கவும் ஒதுக்கீடு செய்து தமிழக வருவாய் துறை பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்யக் கோரி, சேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே இதுசம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், குறிப்பிட்ட இந்த நிலம், சதுப்பு நிலம் அல்ல என தீர்ப்பளித்துள்ளதாகவும், இந்த வழக்கை விசாரிக்க இந்நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த வழக்கில், அரசு உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக் காட்டி, தமிழக அரசின் இரு அரசாணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகமும், இசை பல்கலைக் கழகமும் அமைய உள்ள நிலம் சதுப்பு நிலம் அல்ல என்பதற்கு எந்த ஆதாரங்களையும் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யவில்லை எனக் கூறிய நீதிபதிகள், நீர் சேமிப்பு பகுதிகளை பாதுகாக்காவிட்டால், தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நாள் தொலைவில் இல்லை என தெரிவித்தனர்.

சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும், ஏற்கனவே கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து எல்லைகளை வரையறை செய்ய வேண்டும் எனவும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதுடன், அந்த கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக தனி தொலைப்பேசி எண்களை அறிமுகம் செய்யவேண்டும் என, தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வேலியே பயிரை மேய்ந்தது போல விவசாய நிலங்களில் வான் உயரத்திற்கு கட்டிடங்களை அரசே கட்டினால், விவசாயிகள் எங்கு விவசாயம் செய்வர் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்து பிரிவினருக்கும் பாகுபாடின்றி வரும் பசிப் பிணியை போக்குவது விவசாயிகள் தான் எனவும் குறிப்பிட்டனர்.

banner

Related Stories

Related Stories