இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த விராட் கோலி, தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலியின் செயல்பாடு மோசமாக இருந்ததாக செய்திகள் வெளியாகின.
அதோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லாமல் இந்திய அணி வெளியேறியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தள பதிவில், " டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையை சொன்னால் இந்த வடிவம் என்னை இவ்வளவு தூரம் அழைத்து செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த வடிவம் என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, வாழ்க்கை முழுவது நான் சுமந்து செல்லும் பாடங்களை கற்றுக்கொடுத்தது.
நான் இந்த வடிவத்தில் இருந்து விலகுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இது சரியானது என நினைக்கிறேன். நான் அதற்கு என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அது எனக்கு திருப்பித் தந்துள்ளது. இதற்காக நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் நான் கடந்து செல்கிறேன். நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.