விளையாட்டு

INDvsENG : ஜெய்ஸ்வால் அதிரடி சதம்.. ராஜ்கோட் டெஸ்டில் வலுவான முன்னிலையில் இந்திய அணி !

மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து 322 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

INDvsENG : ஜெய்ஸ்வால் அதிரடி சதம்.. ராஜ்கோட் டெஸ்டில் வலுவான முன்னிலையில் இந்திய அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து சற்று இடைவெளிக்கு பிறகு முன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் அறிமுகம் ஆகினர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணி 33-3 என்று தத்தளித்த நிலையில், பின்னர் ஜடேஜா -ரோஹித் ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்திய அணியை மீட்டனர். 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த கூட்டணியில் சதம் அடித்த ரோஹித் சர்மா 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

INDvsENG : ஜெய்ஸ்வால் அதிரடி சதம்.. ராஜ்கோட் டெஸ்டில் வலுவான முன்னிலையில் இந்திய அணி !
Saikat

அடுத்து வந்த அறிமுக வீரர் சர்ஃபராஸ் கான் 62 ரன்கள் குவித்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜடேஜா சதம் விளாசினார். ஜடேஜா 112 ரன்கள் குவிக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அபாரமாக ஆடிய பென் டக்கெட் 153 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்து ரிடையர்ட் கர்ட் முறையில் வெளியேறினார். பின்னர் வந்த படிதார் ரன் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் முடிவில் கில் 65 ரன்களுக்கும், குல்தீப் 3 ரன்கள் குவித்தும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து மொத்தம் 322 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

banner

Related Stories

Related Stories