விளையாட்டு

ஆண்டுக்கு ரூ.2700 கோடி.. அள்ளிக்கொடுக்க முன்வந்த சவூதி கிளப்.. கால்பந்து வீரர் எம்பாப்பேயின் முடிவு என்ன!

சவூதியில் உள்ள அல் ஹிலால் கிளப் அணி வருடத்துக்கு ரூ.2700 கோடிக்கு எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய முன்வந்ததாக வெளிவந்த தகவல் கால்பந்து வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.2700 கோடி.. அள்ளிக்கொடுக்க முன்வந்த சவூதி கிளப்.. கால்பந்து வீரர் எம்பாப்பேயின் முடிவு என்ன!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த இறுதி போட்டியில் வென்ற மெஸ்ஸி உலகளவில் கொண்டாடப்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஹட் ட்ரிக் கோல் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருதை வென்ற கைலியன் எம்பாப்பே அதிகம் கவனிக்கப்பட்டார். மெஸ்ஸி -ரொனால்டோவின் காலத்துக்கு பின் அடுத்த உலக சூப்பர் ஸ்டாராக கைலியன் எம்பாப்பே வருவார் என கால்பந்து வல்லுநர்கள் முத்திரை குத்தினர்.

தற்போது 24 வயதாகும் கைலியன் எம்பாப்பே ஏற்கனவே 2018-ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். மேலும் மிக இளவயதான எம்பாப்பேயை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தும் அதிரவைத்தது.

தற்போதைய நிலையில் உலகின் அதிக மதிப்பு மிக்க வீரராக இருக்கும் கைலியன் எம்பாப்பே பிரான்சின் புகழ்பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(PSG ) அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் கிளப்போடு அடுத்த ஆண்டோடு ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில், அவர் அந்த அணியில் தொடருவாரா அல்லது வேறு அணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆண்டுக்கு ரூ.2700 கோடி.. அள்ளிக்கொடுக்க முன்வந்த சவூதி கிளப்.. கால்பந்து வீரர் எம்பாப்பேயின் முடிவு என்ன!

இந்த நிலையில், சவூதியில் உள்ள அல் ஹிலால் கிளப் அணி வருடத்துக்கு ரூ.2700 கோடிக்கு எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய முன்வந்ததாக வெளிவந்த தகவல் கால்பந்து வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் நடைபெற்றால் உலகளவில் மிகப்பெரிய விளையாட்டு வீரர் ஒப்பந்தமாக இது மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் சவூதிக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், அல் ஹிலால் கிளப் அணி நிர்வாகிகளை எம்பாப்பே சந்திக்க விரும்பவில்லை என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் ரியல் மாட்ரிட் அணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவந்தார் என்றும், ஆனால் அவரை விடுவிக்க PSG அணி பல கோடி ரூபாய் கேட்ட காரணத்தால் அந்த ஒப்பந்தம் நடைபெறவில்லை என்றும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories