ஐ.பி.எல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் அணி வீரர்கள் துபாயில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருட ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ரோகித் சர்மா கிரீஸிலிருந்து இறங்கி பந்தை தூக்கி அடிக்கிறார்.
அந்தப் பந்து நேராகச் சென்று வெளியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் மேல் விழுந்தது. ”பேட்ஸ்மேன்கள் சிக்கர்கள் அடிப்பார்கள், பெரும் ஜாம்பவான்கள் மைதானத்துக்கு வெளியே அடிப்பார்கள். ஹிட்மேன் சிக்ஸர் அடித்து + மைதானத்துக்கு வெளியேயும் அடித்து + ஓடும் பேருந்தின் மேலும் அடிப்பார்.” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மாவும் ஒருவர். இவை எல்லாவற்றையும் விட மும்பை இந்தியன்ஸ் அணியை நான்கு முறை ஐ.பி.எல் கோப்பையை தனது தலைமையில் வெல்ல வைத்துள்ளார் ரோகித் சர்மா.
கொரோனா ஊரடங்குக்கு முன்பாக நடைபெற்ற அத்தனை வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் இருந்ததால் சிறப்பாக ஆடி வந்தார். அதே ஃபார்மை அவர் இந்த வருட ஐ.பி.எல் தொடரிலும் தொடர்வாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.