விளையாட்டு

‘அந்த’ மேஜிக் நடக்குமா..? - பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையுமா?

நியூசிலாந்தின் ரன்ரேட்டை பாகிஸ்தான் முந்தவேண்டும் என்றால் இமாலய வெற்றி பெற்றாக வேண்டும்.

 ‘அந்த’ மேஜிக் நடக்குமா..? - பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளையுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறிவிட்டன. அரைஇறுதிக்குள் நுழையும் நான்காவது அணி எது என்பது இன்று தெரிந்துவிடும்.

லண்டன் லார்ட்சில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லை என்று 9 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளி எண்ணிக்கை 11 ஆக உயரும். அப்போது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 11 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். இதையடுத்து ரன்-ரேட் அடிப்படையில் ஒரு அணி அரைஇறுதிக்கு தேர்வாகும்.

நியூசிலாந்து அணி +0.175 என்று ரன்ரேட்டில் வலுவாக காணப்படுகிறது. பாகிஸ்தானின் ரன்ரேட் -0.792 என மிகவும் பின்தங்கி உள்ளது. எனவே நியூசிலாந்தின் ரன்ரேட்டை பாகிஸ்தான் முந்தவேண்டும் என்றால் இமாலய வெற்றி பெற்றாக வேண்டும்.

அதன்படி, பாகிஸ்தான் அணி பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றிபெறவேண்டும். முதலில் பேட்டிங் செய்தால் தான் இமாலய வித்தியாசத்தில் வெற்றிபெற முடியும் என்பதால் டாஸ் ஜெயிக்கவேண்டியது அவசியம்.

தற்போதைய சூழலில் பாகிஸ்தான் அரைஇறுதிச் சுற்றை எட்டுவது குதிரைக்கொம்பு தான். அதுவும், வங்க தேச அணி எட்டில் 3 ஆட்டங்களில் வெற்றிபெற்று ஒன்றில் முடிவில்லை என ஆவரேஜான நிலையில் இருக்கிறது.

வங்கதேச ஆல்- ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 2 சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்களுடன், 11 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். வங்கதேச அணியினர் ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப முயல்வார்கள் என்பதால் பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறவே போராட வேண்டியிருக்கும்.

banner

Related Stories

Related Stories