
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால், பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் நடந்துள்ளது. குடமுழுக்கு என்பதை அரசியலுக்காக பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு பாஸ் கொடுத்து உள்ளே அனுப்பியது, உறவினர்களை அனுமதித்தது, முறையான வசதிகள் செய்யாதது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதற்கிடையில் சர்ச்சைக்குரிய நிகழ்வாக குடமுழுக்கிற்கு வருகை தந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவமதிக்கபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, பி.வில்சன் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களை அவமதிக்கும் வகையில் மாண்புமிகு அமைச்சர் ஜெகதீஸ்வரி நடந்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால், இத்தகைய ஆணவத்திற்கு அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இடமில்லை. தலைமை நீதிபதி அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமான நீதித்துறையின் தலைவர் ஆவார். நெறிமுறைப்படி (Protocol), அவர் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு அடுத்தபடியாக வைக்கப்படுகிறார். மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆளும் கூட்டணியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்வரிசை இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும் போது, தலைமை நீதிபதி மட்டும் ஏன் அவமதிக்கப்பட்டார்?

அனைத்திற்கும் மேலாக, அன்னை மீனாட்சியின் குடமுழுக்கு விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் மூலமாகவும், புனித தீர்த்தத்தைப் பெற அனுமதிக்கப்படாததன் மூலமாகவும் பக்தர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் இவற்றுக்காகத் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கோருவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.






