
திமுக-வின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று (செப்.05) சோதனை மேற்கொண்டு வருகிறது.
சட்டமன்றத்தில் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, ஆதாரத்தோடும் புள்ளி விவரங்களோடும் கடந்த ஆட்சியின் திட்டங்கள் குறித்து மிகத்துல்லியமாக பதிலளித்து, தவெக ஆட்சியில் நடக்கும் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றையும் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் கேள்விகளால் தவெக அரசின் அமைச்சர்களையும் முதலமைச்சர் விஜயையும் திணறடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதனைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் தவெக அரசும் முதலமைச்சர் விஜயும், பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ஏவி விட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.

ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.
கே.என்.நேரு அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்! என தெரிவித்துள்ளார்.






