
தூத்துக்குடி கடைமடை பகுதி விவசாயிகள், பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி, நெல்லை–தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கருகிய வாழைப் பயிர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது த.வெ.க அரசின் காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்தது. இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில் விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் "பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை சார்ந்துள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பலமுறை மனு அளித்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறையும் நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது, இந்த அரசு.
விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.






