
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் வாரத்தின் இறுதி நாட்களில் தனது தொகுதியான தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறுவார் என கூறப்படுகிறது.
அதன்படி இன்று தூத்துக்குடி டூவிபுரத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காலை 8 மணிக்கு மக்கள் குறைகளை கேட்டு மனுக்களை வாங்க இருப்பதாக நேற்று (ஜூலை 16) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 17) காலை 8.00 மணி முதலே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமானோர் மனு கொடுப்பதற்காக காத்திருந்தனர்.

தங்கள் பகுதியில் கழிவு நீர் தேங்கி இருப்பது, குடிநீர் வராதது, உதவித்தொகை வராதது என பல்வேறு கோரிக்கைகளோடு காலை முதலே வெயிலுக்கு முன்பாக மனுவை கொடுத்துவிட்டு சென்று விட வேண்டும் என கால்கடுக்க நீண்ட நேரமாக காத்திருந்துள்ளனர்.
ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் எட்டு மணிக்கு பதிலாக 12 மணி வரை 4 மணி நேரமாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவில்லை என்பதால் மனு கொடுக்க வந்த மக்கள் அமைச்சருக்காக காத்துக் கிடக்கும் அவலம் தான் நிலவியுள்ளது.
மக்கள் பிரதிநிதியே இப்படி குறித்த நேரத்திற்கு வராமல் மக்களை காக்க வைப்பது எந்த வகையிலான மாற்றம் என தெரியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து 12 மணிக்கு மேலாக அமைச்சர் வருகை தந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், சமீப நாட்களாக நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாகவே நிகழ்ச்சிகளில் அமைச்சர் ஸ்ரீநாத் கலந்து கொள்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதிகாரம் கையில் இருப்பதால் நாம் தான் எல்லாம் என நினைத்துக்கொள்ளாமல் மக்களுக்கு சேவையாற்றுவதே அதிகாரத்தின் உண்மையான பலன் என்பதனை அமைச்சர்கள் புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






