
தமிழ்நாட்டின் அரசியல் களம் கவர்ச்சியை நோக்கி நகர்ந்திருந்தாலும், கருத்தியல் களமும் நாளுக்கு நாள் வீறிட்டு எழுந்து வருகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகவே அமைந்துள்ளது.
பொதுவாக எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கிறதோ, அந்த திசையில் அரசியல் ஆர்வலர்கள் நகர்வது இயல்பானதே. ஆனால், ஆட்சி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு கொள்கைப் பிடிப்பிற்காக ஒரு கட்சியில் இணைவது வியப்பூட்டும் நிகழ்வுதான்.
அப்படியான வியப்பூட்டும் நிகழ்வுகளை நிகழ்காலத்தில் காட்டும் களமாக தன்னை தகவமைத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரம் கைநழுவிப் போனப் பிறகும், தி.மு.க.வின் தலைமைச் செயலகமாக செயல்படும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிற கட்சியினர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டு, இனி கழகத்தின் வழி மக்கள் பணியாற்றுவோம் என உறுதிகொள்கின்றனர்.
இதனால், முன்னைவிட தற்போது புது எழுச்சியுடன் செயல்படத் தொடங்கியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூன் 14) சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் அந்தோணி மைக்கேல் சாரத் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தனது இயக்கத்தை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
இதனையடுத்து, இச்சிறப்பு நிகழ்வு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
““விளக்கின் மினுக்களுக்கு விட்டில் பூச்சிகள்தான் செல்லும்; இருளகற்றும் விடியலின் ஒளி சூரியனிடம்தான் உண்டு!”
தமிழ்நாட்டின் அரணாக - தமிழர்களின் வளர்ச்சிக்குத் தூணாக விளங்குவது என்றைக்கும் விளங்குவது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என ஏராளமானோர் நம்பிக்கையுடன் இணைந்து வருகின்றனர்.
இன்று நமது தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது முன்னிலையில், தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் அந்தோணி மைக்கேல் சாரத் அவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனது இயக்கத்தைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டார்.”
இந்த வியப்பூட்டும் நிகழ்வுகள், ஆளும் கவர்ச்சியாளர்களை சற்று கதிகலங்க வைத்துள்ளது மறுக்க முடியாததாய் அமைந்துள்ளது.






