
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெற்ற காங்கிரசு, தேர்தலுக்குப் பிறகு தி.மு.க உடனான கூட்டணியை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் விலகி த.வெ.க கூட்டணிக்கு சென்றது.
அதற்கு கைமாறாக த.வெ.க அமைச்சரவையில் இரு அமைச்சர்களையும் பெற்றது. இதனையடுத்து, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகம், தான் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், அந்த இடம் சட்டப்பேரவையில் அதிக இடங்களை வைத்துள்ள கட்சி என்கிற வகையில், த.வெ.க வசம் செல்ல.. அதையும் தற்போது தன்வசமாக்கியுள்ளது காங்கிரஸ்.
இதனால், தேர்தலுக்கு முன்பு ஒரு மாநிலங்களவை இடம், தேர்தலுக்கு பின்பு ஒரு மாநிலங்களவை இடம் என தங்களது காட்டில் மழைப் பெய்வதாக தாங்களாகவே நினைத்துக்கொண்டிருந்த காங்கிரசாருக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள் நெத்தியடி கொடுத்துள்ளன.

த.வெ.க கூட்டணியில் ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் பெற்ற நிலையில், அந்த இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியது. உடனே, பிரவீன் சக்கரவர்த்தியும், தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்” என பதிவிட்டார்.
அதற்கு பதிலடி தரும் வகையில், சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்,“புதிய கூட்டணியின் சார்பில், தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்று தான் சொல்ல வேண்டும்” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து சி.பி.ஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்,“பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்று, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை. அவரின் பதிவு முற்றிலும் தவறானது. அத்தகைய, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதுவும் தெரியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால், புன்சிரிப்பில் துள்ளிகுதித்து வந்த காங்கிரசு முகம் சுருங்கியுள்ளது.






