
பெண்கள் பாதுகாப்பு என்பது அதிமுக ஆட்சியில் மோசமாக இருந்தது. தற்போது எதிர்க்கட்சிகளாக இருக்கும் சூழலிலும் பெண்கள் குறித்த அருவருக்கத்தக்க வகையில் வார்த்தையால் தாக்கி வருகிறது அதிமுக. அதிமுக நிர்வாகிகளின் பெண்கள் குறித்த மோசமான பேச்சுக்கு அதிமுக தலைமை ஒரு வாழ்த்தி கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பெண்களை குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். அதாவது, திராவிட மாடல் அரசு கொண்டு வந்துள்ள 'உங்க கனவ சொல்லுங்க' என்ற அருமையான திட்டத்தை விமர்சித்த சி.வி.சண்முகம், "அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று உங்கள் கனவைச் சொல்லுங்கள் என்கிறார். கனவை சொன்னால் இவர் அதை நிறைவேற்றுவாராம். ஆம் எனக்கு நயன்தாரா வேண்டும். இவர் கனவை நிறைவேற்றுவாரா.?" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. சி.வி.சண்முகம் பேச்சுக்கு திமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த கண்டன பதிவு வருமாறு :-
=> கனிமொழி எம்.பி. :-
அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்.

=> தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. :-
அரசியல் ஒழுக்கமும் அடிப்படை மனிதநேயமும் இன்றி அதிமுக-வின் மூத்த தலைவர் ஒருவரே அநாகரிகமாக பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. பெண்களை இழிவுபடுத்தி, பெண்மையை மதிக்காத அரசியல் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாது. இத்தகைய அரசியலை மக்கள் முற்றிலும் நிராகரிப்பதே காலத்தின் தேவை.

=> கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. :-
மேட்டிமைத்தனத்தின் உச்சத்தில், முதலாளித்துவ, பெண்ணடிமைத்தனத்தோடு சமூகத்தை அணுகும் ஒரு கீழ்த்தரமான மனப்பான்மையோடு ஒருவர் இருந்தால் மட்டுமே, இவ்வளவு வக்கிரமாகப் பேசமுடியும்!
எளிய மக்களின் கனவுகளை நனவாக்க நமது திராவிட மாடல் முதல்வர் கொண்டுவந்துள்ள உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தைப் பற்றி, தரம்கெட்ட ஒருவரால்தான் இப்படி அருவருக்கத்தக்க விமர்சனத்தைச் சொல்லமுடியும்!
உங்கள் கனவைச் சொல்லுங்க என்று நாங்கள் உரிமையோடு கேட்கத்தான் செய்வோம்..!
ஆம்! நாங்கள் 30 இலட்சம் மழலைகளின் பசியாற்ற காலை உணவுத் திட்டம் தந்த திராவிட மாடல் அரசின் தூதுவராக கேட்கிறோம்..!
இலட்சோபலட்சம் மாணவமணிகள் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் வழியாக ஊக்கத்தொகை பெற்று முன்னேறுகிறார்களே அவர்களது வளர்ச்சிக்கான நம்பிக்கையாக கேட்கிறோம்..!
நாங்கள் மக்களின் வளர்ச்சி சார்ந்த கனவுகளை நிறைவேற்ற சமூகநீதி வழிநின்று கேட்கிறோம்..!
பதவியாசை பிடித்து நாற்காலிக்கு நாட்டியமாடும் அடிமைகளுக்கு இது என்றுமே புரியப்போவதில்லை!
ஒரு வழக்கறிஞராக, மாநிலங்களவை உறுப்பினராக, இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் அவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்..!!






