கடந்த முறை ஒடிசா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி புரி ஜெகநாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக விமர்சித்திருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன
இதனைத் தொடர்ந்து பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, பீகாரிகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பிரதமரின் இந்த பேச்சை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள முதலமைச்சர், "இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.






