கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜுலை 30 அன்று, திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுமார் 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். இதனால், கேரள மாநிலமே மீளாத துயரத்திற்கு உள்ளானது.
வயநாடு நிவாரணத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து, கேரளத்திற்கு உதவிகள் குவிந்தன. எனினும் இந்த பேரிடர் நடந்து இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்து வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. கேரள உயர்நீதிமன்றமே ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, சாதகமான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும் என்று அறிவுரை கூறியது.
ஆனாலும் ஒன்றிய அரசு சார்பில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனிடையே, வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை ரத்துசெய்ய கோரிய வழக்கு இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இயற்கை பேரிடர் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கி கடன்களை ரத்துசெய்ய சட்ட விதிமுறை எதுவும் இல்லை என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடன்களை ரத்து செய்ய முடியுமா என்பது அல்ல. ரத்துசெய்ய ஒன்றிய அரசு தயாராக உள்ளதா? என்பது முக்கியம். அதற்கு விருப்பம் இல்லை என்றால் அதனை சொல்ல தைரியம் வேண்டும். நீதிமன்றத்தை முட்டாளாக்க முற்சிக்கிறீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பினர்.
மேலும், குஜராத், அசாம் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதிவழங்கி உள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டிய நிலையில்,சட்ட நுணுக்கங்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக ஒன்றிய அரசு மக்களுக்கு உதவ விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக கூறுமாறும், இதுபோன்ற தருணங்களில் கூட ஒன்றிய அரசு உதவ முன்வரவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றும் காட்டமாக விமர்சித்தனர். அதோடு, இந்த வழக்கில், வங்கிகளை வழக்கில் இணைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், உடனடியாக கடன்களை வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.