ஒன்றியத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க, தனக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளுக்கு ஆளுநர் பதவி உள்ளிட்ட உயர் பொறுப்புகளை கையூட்டாக அளித்து வருகிறது. அதற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்கள் உகந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாரிகளுக்கு உயர் பொறுப்புகள் மட்டுமல்ல, கட்சி நிர்வாகிகளுக்கு அதிகாரிகளாகவும் பொறுப்புகள் வழங்கப்படும் என்ற புதிய சலுகையை வெளிப்படுத்தியுள்ளது பா.ஜ.க அரசு.
அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் தீவிர செயல்பாட்டாளராகவும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும் விளங்கி வந்த வழக்கறிஞர் ஆர்த்தி சாத்தே, தற்போது உச்சநீதிமன்றத்தால் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைக் கண்டித்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி மூத்த தலைவர் ரோகித் பவார், “ஆளும் பா.ஜ.க கட்சிக்கு ஆதரவாக வழக்கு விசாரணை செய்து வந்த ஆர்த்தி என்பவரை, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது.
அரசியல் பின்னணி இருக்கும் ஒருவர், எப்படி நடுநிலைத்தன்மையோடி வழக்குகளை கையாளமுடியும். அவ்வாறு நடுநிலைத்தன்மை வகிக்க முடியாத ஒருவர் எப்படி நீதித்துறையில் தலைமை பொறுப்பு வகிக்க முடியும்?
இந்த பணி நியமனத்தை அரசும், நீதித்துறையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என தனது சமூக வலைதளப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.