அரசியல்

பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் நம்பமாட்டார்கள்! : செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு!

“எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி அமலாக்கத்துறை, வருமானவரித் துறையின் பிடியில் இருக்கிற வரை அமித்ஷாவின் பிடியில் இருந்து அதிமுக மீள முடியாது.”

பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் நம்பமாட்டார்கள்! : செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி வரலாற்றை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,

2014 மக்களவை தேர்தலில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நரேந்திர மோடிக்கு எதிராக மோடியா? லேடியா? என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார் 2016 இல் அவர் மறைகிற வரை நீட், உதய் மின்திட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற மறுத்து வந்தார்.

ஆனால் அவரது மறைவிற்கு பிறகு முதலமைச்சராக வந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சீரழிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வை முதல்முறையாக 2017 இல் நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த 2014 வரை தமிழகத்தில் நீட் திணிக்கப்படவில்லை. அதேபோல உதய் மின் திட்டத்தை அன்றைய அதிமுக அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் அத்திட்டத்தின் படி 75 சதவீத கடனை தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கவேண்டும். ஆனால் 34.88 சதவீத கடன் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மீதி கடனை ஈடுகட்ட எடப்பாடி அரசு நடவடிக்கை எடுக்காததால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன் சுமை 2011 - 2012 இல் இருந்ததை விட 2021 இல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் ஆக உயர்ந்து - அதாவது 332 சதவீதம் அதிகரித்தது. இதனால் மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. 8 ஆண்டுகளில் மின் கட்டண உயர்வு செய்யாத காரணத்தால் 2022 இல் செய்ய வேண்டிய நிலை திமுக அரசுக்கு ஏற்பட்டது. இதற்கு காரணம் அதிமுக ஆட்சியே தவிர, திமுக ஆட்சி அல்ல.

2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக - பாஜக, 2023 இல் கூட்டணியை முறித்துக்கொண்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 2024 மக்களவை தேர்தல் மட்டுமல்ல, 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளிவந்த உடனே அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

ஆனால் காலப்போக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாக பாஜக கூட்டணியில் சேரவேண்டிய நிர்பந்தம் அதிமுகவுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி இதுவரை விளக்கவில்லை.

சமீபத்தில் மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் திராவிட இயக்கத்தையும், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டபோது மேடையில் அமர்ந்திருந்த உதயகுமார், வேலுமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாய் மூடி மௌனியாக இருந்தது ஏன்?

பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் நம்பமாட்டார்கள்! : செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு!

திராவிட இயக்கத்தை அழிப்போம், ஆன்மீகத்தை வளர்ப்போம் என்றும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்றும் முருகன் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதை எதிர்க்க துணிவில்லாமல் அதிமுக ஜால்றா அரசியல் நடத்தியது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜால்றா அடிப்பதாக கூறுவது மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமாகும்.

அதேபோல தமிழ்நாட்டின் கடன்சுமை அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2011 இல் அதிமுக ஆட்சி அமைந்தபோது, திமுக ஆட்சி வைத்த கடன் ரூபாய் ஒரு லட்சம் கோடி. ஆனால் 2021 இல் ஆட்சியை விட்டு அதிமுக விலகுகின்ற பொது வைத்திருந்த கடன் ரூ.5.7 லட்சம் கோடி. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பெற்ற கடன் ரூ. 4.18 லட்சம் கோடி. இந்நிலையில் தமிழ்நாட்டின் கடன் சுமையை பற்றி பேசுகிற எடப்பாடி பழனிசாமி ஒன்றிய பாஜக அரசின் கடன் சுமையை பற்றி பேச துணிவு இருக்கிறதா?

2014 இல் ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு வைத்துச்சென்ற கடன் ரூ. 55 லட்சம் கோடி. ஆனால் 2025 இல் ஒன்றிய பாஜக அரசின் கடன் ரூ. 185 லட்சம் கோடி. 1947 முதல் 2014 வரை 67 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் கடன் ரூ. 55 லட்சம் கோடி தான். ஆனால் 2014 முதல் 2025 வரை 11 ஆண்டுகளில் ரூ. 130 லட்சம் கோடி ஒன்றிய பாஜக அரசு கடன் வைத்திருக்கிறது.

இதன்படி இந்தியாவில் தனிநபர் கடன் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம். வரலாறு காணாத கடன் சுமையால் பொருளாதார பேரழிவை விமர்சனம் செய்யாமல் இருக்கும் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஜால்றா அடிப்பது ஏன்?

ஒன்றிய அரசின் 3 கருப்பு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு, உதய் மின் திட்டத்தில் சேர்ந்து மின் கட்டண உயர்வுக்கு காரணமாக இருந்த அதிமுகவை விட ஒரு ஜால்றா கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது.

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மும்மொழி கொள்கை திணிப்பு, மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் கல்வித்துறைக்கு நிதி வழங்க மறுப்பு, தொகுதி சீரமைப்பு என்று கூறி தென் மாநில நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை எதிர்க்காத அதிமுகவை விட ஒரு அடிமை கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி அமலாக்கத்துறை, வருமானவரித் துறையின் பிடியில் இருக்கிற வரை அமித்ஷாவின் பிடியில் இருந்து அதிமுக மீள முடியாது. அதனால் தான் தற்கொலைக்கு சமமான முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணங்களில் மக்கள் முன்னால் நீலிக்கண்ணீர் வடிப்பதை எவரும் நம்பவும் மாட்டார்கள், ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.

banner

Related Stories

Related Stories