பொதுக் கல்வியை வலுப்படுத்தவும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் பி.யூ.சி வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பேருந்துப் போக்குவரத்து வழங்கும் புதிய முயற்சியை அறிவித்துள்ளது.
இது குறித்து துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது அதிகாரப்பூர்வ X (முன்னர் ட்விட்டர்) கணக்கில் கர்நாடக பொதுப் பள்ளிகளில் (KPS) சேரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பைப் பகிர்ந்துள்ளார்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதையும் மாணவர் வருகை மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். அதோடு, கர்நாடக பொதுப் பள்ளிகளில் மாணவர்கள் கல்வி பெறுவதை எளிதாக்குவதற்கும், போக்குவரத்து தடைகளை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு ஒரு முக்கிய படியாகும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் 1996–97ஆம் ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞரால் அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.