இன்று உலக மக்கள்தொகை நாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது என கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு குறைவான மக்களவைத் தொகுதிகள். குறைவான நிதி ஒதுக்கீடு செய்யும் ஒன்றிய பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "உலக மக்கள்தொகை நாளில், ஒன்றிய அரசுக்கு ஒரு நினைவூட்டல் :
* தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது,
* பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது.
* அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது.
* நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை முன்னெடுக்கிறது.
ஆனால், பதிலுக்கு நமக்குக் கிடைப்பது என்ன?
குறைவான மக்களவைத் தொகுதிகள். குறைவான நிதி ஒதுக்கீடு. நாடாளுமன்றத்தில் இருந்து ஒதுக்கப்படும் நமது குரல்.
ஏன்? ஏனென்றால், தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அதுதான் டெல்லியை அச்சுறுத்துகிறது.
இதைவிட மோசம் என்ன என்றால், திரு. பழனிசாமி அவர்களும் அவரது கட்சியும் தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார்கள். நாம் எட்டிய வளர்ச்சிக்காக நம்மைத் தண்டிக்கும் அநியாயமான தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறார்கள்.
தெளிவாகச் சொல்கிறேன்: தமிழ்நாடு உங்களுக்கு அடிபணியாது. நாங்கள் ஒருமித்து எழுவோம்! இது டெல்லி அணிக்கு எதிரான ஓரணி!
நமது மண், மொழி, மானம் காக்க இணைவீர் #ஓரணியில்_தமிழ்நாடு! "என்று கூறப்பட்டுள்ளது.