ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 2151.59 கோடி கல்வி நிதியும், அதற்கான ஆறு சதவீத வட்டி 139.70 கோடியும் சேர்த்து 2291 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்து உள்ளது.
இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி முறையீடு செய்தார். அந்த மனுவில் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டாக ஒன்றிய அரசு நிதி வழங்காதால் 43 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "ஒன்றிய அரசு தனது கல்வி கொள்கையை திணிக்க நிதி விவகாரத்தை பயன்படுத்த கூடாது. நிதியை நிறுத்திவைப்பது மாநில உரிமைக்கு , மாநில சுயாட்சிக்கு எதிரானது. அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமையின் படி மாநில அரசு சொந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு தடையாக இருக்கிறது . ஒன்றிய அரசு கல்வி நிதி வழங்காததால் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதர பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்"என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 29 ஆம் தேதி தாக்கல் செய்துள்ள வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்த நிலையில், கோடை விடுமுறை கால அமர்வில் பரிசீலிக்க வாய்பில்லை என்று நீதிபதிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை முடிந்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. .