கொரோனா பரவல் காரணமாக 2021-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் ஒன்றிய அரசு இருந்து வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒன்றிய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டமாக நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதி மறுவரையறையை நடைமுறைப்படுத்தவே ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!"என்று கூறப்பட்டுள்ளது.