ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 4 நாட்களாக இரு நாடுகளும் தாக்குதல் நடத்தினர். ஆனால் பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய ராணுவம் தொடர்ச்சியாக முறியடித்து வந்தது.
இந்த போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் திடீரென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தார். இதன் பிறகுதான் ஒன்றிய அரசே தாக்குதல் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபரின் தலையீடு இருந்ததா? என எதிரிக்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, ”இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை எப்படி நடந்தது?, என்ன விவாதிக்கப்பட்டது? என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உண்மையை சொல்ல வேண்டும். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) சஞ்சய் ராவத், ”சிம்லா ஒப்பந்தத்தை படியுங்கள். இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் மட்டுமே. எந்த மூன்றாவது நாட்டிற்கும் இதில் தலையிட உரிமை கிடையாது. அப்படி இருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு யார் உரிமை கொடுத்தது?. நமது அரசியல் தலைமை பலவீனமாக இருந்தாலும், நமது ராணுவத் தலைமை பலமாக உள்ளது” கேள்வி எழுப்பி இருக்கிறார்.