மணிப்பூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பாஜகவை சேர்த்த பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீக்க வேண்டும் என்று 21 எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாஜகவை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் உள்பட 21 பேர் சேர்ந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அமைதி, இயல்பு நிலையை ஏற்படுத்த முடியவில்லை. எனவே, குடியரசு தலைவர் ஆட்சியை நீக்கிவிட்டு மீண்டும் மக்கள் ஆட்சி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் சுமார் 60,000 பேர் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியாமல் இன்னும் முகாம்களில் தங்கி உள்ள நிலையில், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.