மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், ”நாடுமுழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
தற்போது அது குறித்த மேலும் கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பை டிஜிட்டல் முறையில் நடத்த திட்டம். அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தும் விதமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையில் உள்ள SC, ST பிரிவுக்கு அடுத்ததாக சாதியை குறிக்கும் பத்தியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதிகளை நேரடியாக அங்கு பதிவு செய்வதற்கு பதிலாக சாதிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கு தனி குறியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த குறியீடுகள் புதிய பத்தியில் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போதைய கணக்குப்படி 46 லட்சம் சாதி பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசு கணக்கின் படி 2650 ஓ.பி.சி பிரிவுகள் ஒன்றிய பட்டியலில் உள்ளது. SC பட்டியலில் 1170 பிரிவுகளும், ST பட்டியலில் 890 சாதிகளும் உள்ளன. ஒன்றிய பட்டியலில் சேர்க்கப்படாத சாதிகளும் பல மாநிலங்களில் உள்ளன.