பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது மீண்டும் மும்மொழி கொள்கை என இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது.
புதிய கல்வி கொள்கையில் மூன்றாம் மொழியாக ஏதும் ஒரு இந்திய மொழி என்று சொல்லப்பட்டாலும, ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுக்க மட்டுமே நிதி ஒதுக்கி வருகிறது. இதனால் இதுவும் இந்தி திணிப்பு என்று விமர்சனம் எழுந்துள்ளது.
அதனை உண்மை என நிரூபிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாய பாடமாக கற்றுத்தரப்படும் என்று அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாஜக அரசின் இந்த முடிவுக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "இந்தி மொழி மீது எனது கட்சிக்கு எந்த வெறுப்பும் இல்லை, ஆனால் அது ஏன் மகாராஷ்டிராவில் கட்டாயப்படுத்தப்படுகிறது. இந்தியை கட்டாயமாக்கும் செயலை எங்கள் கட்சி அனுமதிக்காது"என்று கூறியுள்ளார்.