பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு 2023 ஆண்டு தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போதே மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ள ஆளுநரின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து சில மசோதாக்கள் மீது அனுமதி வழங்கினார். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது 2 மசோதாக்கள் மீது அனுமதி வழங்கிவிட்டு 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். இந்த விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி குடியரசு தலைவரிடம் நிலுவையில் உள்ள 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி நிலையில், அதன் விவரங்கள் இன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. அதில், 10 மசோதாக்களுக்கு தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் :
எந்தவொரு அதிகாரமும், அரசமைப்பு சட்டத்தை மீற முயற்சிக்கக்கூடாது. ஆளுநர் அலுவலகமும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஓர் அதிகார அமைப்பு மீற முயற்சிக்கும்பட்சத்தில், அரசமைப்புச் சட்டக் காவலராக செயல்படும் பொறுப்பு, இந்த நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறையைத் தெளிவாக மீறியிருக்கிறது.
ஆளுநரின் செயலற்றத் தன்மையாலும் இந்தத் தீர்ப்பையும் அவர் அலட்சியம் செய்யக் கூடும் என்பதாலும் முழுமையான நீதி வழங்க எங்களுக்கு இருக்கும் ஒரே வழி இதுதான்
பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிப்பதாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம். இது எங்களின் அரசமைப்புச் சட்ட ரீதியான கடமையாகும்.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ் உள்ள எங்கள் அதிகாரத்தை நாங்கள் சாதாரணமாகவோ ஆழமாகச் சிந்திக்காமலோ பயன்படுத்தவில்லை.