சென்னை OMR சாலை, காரப்பாக்கத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி காரப்பாக்கம் அருகில் மாநில ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது மாணவர்களை ஒவ்வொருவராக வற்புறுத்தி அழைத்து கையெழுத்திட பாஜகவினர் கூறினர், அதை காதில் வாங்காத சில மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பிஸ்கெட் தருவதாக அழைத்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் பலகையில் கையெழுத்து பெற்றனர்.
மாணவர்களை கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்கியது குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் பாஜகவினர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "மாணவர்கள் தாங்களாகவே முன் வந்து இது போல மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் போட்டால், அதனை தடுக்கமாட்டோம். ஆனால், கையொப்பம் போடுவதற்கு விருப்பம் இன்றி, பள்ளிக்கு செல்லும் மாணவர்களை தடுத்து கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்க அழைத்து செல்வது மாணவர்களை மிரட்டுவதற்கு சமமானதாகும்.
சில இடங்களில் மாணவர்களுக்கு பிஸ்கெட்கள் வழங்கி அவர்களை அழைத்து வந்து கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுபோல நடந்தால் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.