பா.ஜ.க.வின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தமிழரசன், 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பில் இருந்து மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன், தனியார் சட்டகல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே நிலையில், பா.ஜ.க.வின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் காமராசபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த ஆறு ஆண்டு காலம் காதலித்து வந்துள்ளார். மேலும் தனது வீட்டிற்க்கு அழைத்து சென்றவர், பெற்றோர் உதவி உடன் அப்பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி மூளை சலைவை செய்து, சிறிது சிறிதாக ரூ.30 லட்சம் பணத்தையும், 15 சவரன் தங்க நகைகளையும் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், தமிழரசன் வைத்திருந்த மடிக்கணினியை அப்பெண் சோதனை செய்த போது பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழரசனிடம் கேட்ட போது அப்பெண்ணையும் தனிமையில் இருக்கும் வீடியோ எடுத்து வைத்ததாக மிரட்டி மீண்டும் பணத்தை பறித்துள்ளார்.
இது குறித்து சிட்லப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழரசனை கைது செய்த காவல்துறை, 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் தமிழரசன் தொடர்பில் இருந்ததை கண்டறிந்தனர்.
தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த இளம் பெண்ணிடமும் ஆசை வார்த்தைக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் வரை பணத்தை மிரட்டி பறித்ததாக, அப்பெண் புகார் அளித்துள்ளார்,
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தமிழரசனை சிறையில் அடைத்து, கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.