தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிடாமல் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் கூட வாங்காமல் போனது, தி.மு.க.விற்கு பெரும் வெற்றியாக அமைந்தது.
வெற்றி வாகை சூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.விற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் பாராட்டுகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 10) சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு, வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.