நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் இரண்டு சட்டமுன்வடிவுகளை முதலமைச்சர் தாக்கல் செய்தார். இந்த நிலையில், அந்த சட்டத்திருத்தம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
பாலியல் வன்புணர்ச்சிக்கு முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
நெருங்கிய உறவினர் (அ) காவல்துறை ஊழியர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வைக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை (அ) ஆயுள் தண்டனை (அ) மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் (அ) மரண தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
பாலியல் வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்துக்கு முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
மீண்டும் மீண்டும் குற்றம் இழைத்தவர்களுக்கு குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
பாலியல் தொல்லையில் ஈடுபட்டவர்களுக்கு முன்னர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5 ஆண்டுகள் விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
பெண்ணை பின் தொடர்தலுக்கு முன்னர் தண்டனை கிடையாதுஎன்ற நிலையில், தற்போது முதல் முறை 5 ஆண்டுகள் சிறை தண்டனை , 2வது முறை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
ஆசிட் வீச்சு குற்றத்துக்கு முன்னர் 10 ஆண்டு சிறை முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் (அ) மரண தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
ஆசிட் வீச முயற்சித்தல் குற்றத்துக்கு முன்னர் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10 ஆண்டு சிறை முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.