அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் 5 ஆவது நாளாக நடை பயணமாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்", பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திமுக அரசுக்கு இது ஒரு நெருக்கடி அழுத்தத்தை கொடுக்கிறதா" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "மக்களோடு ஒன்றிணைந்து இருக்கக்கூடிய கட்சி திமுக. தமிழ்நாட்டில் தனது கால் படாத சாலைகளே இல்லை என்ற வகையில் தமிழ்நாடு முழுக்க பயணிப்பவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இறக்குமதி செய்யப்பட்ட தலைவர் அல்ல எங்கள் தலைவர். எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் திறந்த புத்தகமாக இருக்கக்கூடிய திமுகவும் திராவிட மாடல் அரசும் சந்திக்க தயாராக இருக்கிறது.விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கிறார்கள். விஷத்தை முறிக்கின்ற மூலிகையை முதலமைச்சர் கையில் எடுத்துள்ளார் எல்லா சூழ்நிலையிலும் அசாதாரண சூழ்நிலையிலும் சமாளிக்கக்கூடிய ஒருவர்தான் தமிழக முதலமைச்சர். என தெரிவித்தார்.