சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெய்வ திருவுருவ படங்களுடன் தயாரிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள், புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 2023,2024 ஆகிய ஆண்டுகளில் நாட்காட்டி வெயிடப்பட்டுள்ளது. அதே போல வரும் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1200 பெரிய நாட்காட்டியும், 25,000 சிறிய நாட்காட்டியும் தயார் செய்யப்பட்டு திருக்கோயிலில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
கடந்த ஆண்டுகளில் சிறிய நாட்காட்டிகள் மூலம் 6 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்தது. பெரிய நாட்காட்டியை தயாரித்து அரசு அலுவலங்கள் கொடுக்கப்பட்டது. அதன் தயாரிப்பு செலவிலனம் போக மீதம் 3 லட்சம் திருக்கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
திருக்கோயிலுக்கு காணிக்கையாக பெறப்படுகிற பலமாற்று பொன்இனங்களை ஒய்வு பெற்ற நீதிபதிகளை வைத்து மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.
இதனையடுத்து, தே.மு.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் “தேமுதிகவை பார்த்து திமுக பயப்பிடுகிறது” என்ற அண்மை பேச்சு குறித்த கேள்விக்கு, “பயம் என்பதே அறியாத இயக்கம் திமுக. உறுதிமிக்க தலைவர், எஃகு போன்ற மன உறுதி கொண்ட தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கும் திமுக எதற்கும் பயப்படாது.
விஜயகாந்த் நல்ல கலைஞன், முத்தமிழறிஞர் கலைஞர் மீது மாறா பற்று கொண்டவர். அவருக்கு அரசு முழு மரியாதை தந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் விருப்பப்பட்டது போல் நேற்றைய பேரணி நடைபெற்றுள்ளது.
அரசியலில் கூட்டணிகளில் இலாபம் நஷ்டம் கணக்குகளை பார்ப்பது இல்லை. நேற்றைய நிகழ்வு முழுமனதோடு விஜயகாந்த் மீது அன்பு கொண்டதால் தான், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். எனவே, விமர்சனங்களை கடந்து செல்வோம் அரசியல் ஆக்க வேண்டாம்” என தெரிவித்தார்.