ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது முதலே அதன் பேச்சும், நடவடிக்கையும் முற்றிலும் வெவ்வேறாக தான் அமைந்து வருகிறது. பெண்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என பேசும் பா.ஜ.க.வின் ஆட்சியின் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உச்சம் தொட்டுள்ளன.
குடிசைகளை போக்குவோம் என முன்மொழியும் பா.ஜ.க தான், சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களின் கான்கிரீட் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வருகிறது.
வறுமையை நீக்குவோம், கருப்பு பணத்தை பறிமுதல் செய்து ஏழைகளின் வங்கிக்கணக்கில் போடுவோம் என வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த பா.ஜ.க தான், முதலாளித்துவ அரசியலை முன்னெடுத்து, அதிகப்படியான வரி விதிப்புகளை கட்டவிழ்த்து மக்களை வஞ்சித்து வருகிறது.
இது போன்ற நடவடிக்கைகள், ஒன்றிய அரசின் அனைத்து துறைகளிலும் இடம்பெற்று வருகின்றன. அவ்வகையில் ஒன்றிய அரசின் ஊழியர்களிடையிலான இடஒதுக்கீடு விகிதத்தையும் விழுங்கி வருகிறது ஒன்றிய பா.ஜ.க.
இதுவரை ஒன்றிய அரசால் தெரிவிக்கப்பட்ட தரவுகளின் படி, ஒன்றிய அரசு பணியிடங்களில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படுகிறது என்பது தெளிவடைந்து, அதற்கு எதிரான சமூக நீதி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
ஆதலால், பா.ஜ.க.வின் அதிகாரத்துவ அரசியல் நோக்கம் சிதைந்து போகும் என்ற எண்ணத்துடன், தற்போது ஊழியர்களின் இடஒதுக்கீட்டுத் தரவுகளை மறைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இது குறித்து சி.பி.ஐ.எம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “ஒன்றிய அரசின் ஊழியர் நலன் மற்றும் பயிற்சி அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் வழக்கமாக பிரிவு 1 முதல் 4 வரையிலான மொத்த ஊழியர் எண்ணிக்கை மற்றும் அவர்களில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி ஊழியர்கள் எண்ணிக்கை தரப்படும். ஆனால் 2023 - 24-ல் அந்த விவரங்கள் தரப்படவில்லை.
விவரங்களை தந்தால் இட ஒதுக்கீடு நிலுவை காலியிடங்கள், மீறல்கள் என்ற கோரிக்கைகள், விமர்சனங்கள் வரும். ஆகவே அந்த விவரங்களையே தூக்கி விட்டார்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகளால், பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கருத்தியல்கள் முன்பை விட தற்போது வேகமாக பரப்பப்பட்டு வருவது தெளிவடைந்து வருகிறது. இதனை எதிர்த்து சமூக நீதியை நிலைநாட்டும் இடத்தில் மக்கள் இருக்கின்றனர் என்பதும், அது தேர்தலில் பா.ஜ.க அடையும் தோல்வியின் வழி வெளிப்படும் என்பதும் உறுதியடைந்து வருகிறது.