அரசியல்

“திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு?” - மோடியின் தியானத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்!

தமிழர்களை திருடர்கள் என்று கூறும் வகையில் பேசிய மோடி, தற்போது தமிழ்நாட்டில் ஏன் தியானம் செய்கிறார் என்று சு.வெங்கடேசன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.

“திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு?” - மோடியின் தியானத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் நடைபெற்று வந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாளையோடு (ஜூன் 1) நிறைவடைகிறது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறி, மோடி கன்னியகுமரியில் தியானத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

அதன்படி நேற்று கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, அங்கிருந்த விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய தொடங்கினர். 48 மணி நேரம் (ஜூன் 1) வரை தொடர்ந்து தியானத்தில் மோடி ஈடுபடவுள்ளார். குளிப்பதற்கும், தூங்குவதற்கு மட்டுமே சிறிது நேரம் ஒதுக்குவார். தொடர்ந்து ஏசி அறையில் அவர் விடாமல் தியானத்தில் ஈடுபடுகிறார்.

மேலும் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் அதற்கு பதிலாக பழச்சாறுகள், பழவகைகள் உள்ளிட்டவையை எடுத்துக்கொள்கிறார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் தியானம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 28 நொடி உள்ள அந்த வீடியோவில் 9 ஆங்கிளில், கேமராக்கள் அவரை விதவிதமாகி போட்டோஷூட் எடுத்துள்ளது.

“திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு?” - மோடியின் தியானத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்!

விவேகானந்தர் மண்டபத்தில், விவேகானந்தர் சிலை முன்பு அமர்ந்து மோடி தியானம் செய்து வருகிறார். பொதுவாக தியானத்தில் இருப்பவர்கள் அமைதியான சூழலில் இருப்பார்கள். மேலும் சாதாரண இயற்கை காற்றையே சுவாசிப்பார்கள். ஆனால் மோடியின் தியான இடத்தில் முழுவதுமாக AC அமைக்கப்பட்டு அதில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தேர்தல் விதிகளை தொடர்ந்து மீறி வரும் மோடி, தற்போது பிரசாரம் ஓய்ந்த பிறகும், அனைவர் கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்று தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது தியானம் தொடர்பாக புகைப்படம் வீடியோ என பலவை வைரலாகி வருகிறது. மோடியின் இந்த செயலுக்கு கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

“திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு?” - மோடியின் தியானத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்!

இந்த நிலையில் சிபிஐ (எம்) எம்.பி சு.வெங்கடேசன், திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு? என்று மோடிக்கு அறிக்கை வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :

"பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரிமுனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்துவது எமது நோக்கமன்று. விவேகானந்தர் பாறை உள்ள மண்டபத்தை அரசதிகாரத்தைச் சார்ந்த ஒருவர் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிப்படி தவறென்பது அனைவருக்கும் தெரியும், தேர்தல் ஆணையத்தைத் தவிர.

தியானம் என்ற செயல் நேர்மை என்ற பண்பின் ஈடுபாட்டோடு தொடர்புடையது என்பதை சம்பந்தப்பட்டவர்களே நம்பாதபோது தேர்தல் ஆணையம் ஏன் நம்பவேண்டும்? தேர்தல் ஆணையத்தை நேர்மைப்படுத்துவதோ, நேர்மையாளர்களை மட்டுமே தியானம் செய்ய வைப்பதோ நம்முடைய வேலையல்ல. நாம் எழுப்ப நினைப்பது ஒரேயொரு கேள்வியை மட்டுந்தான்.

தமிழகத்திற்கு தியானம் செய்ய வருவதற்கு முன்பு ஒரிஸாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் புகழ்பெற்ற ஜகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார் மோடி. ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தினார். இப்பொழுது திருடர்களின் நிலத்தில் தியானம் செய்ய வந்துள்ளார்.

“திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு?” - மோடியின் தியானத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்!

தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும். உத்திரபிரதேசத்தில் போய் எங்களை இழித்துப் பேசியதையும், ஒரிஸாவில் போய் பழித்துப் பேசியதையும் ஒவ்வொரு தமிழரும் அறிவோம். எங்கோ நின்று பொல்லாங்கு பேசுதலுக்குத் தமிழ் இலக்கியம் சூட்டியுள்ள பெயர் "புறம் பேசுதல்".

நீங்கள் அங்கு பேசியதை இங்கு பேசி உங்கள் நேர்மையை நிரூபியுங்கள் என்று கூட நாங்கள் கேட்க மாட்டோம். எந்த ஒரு மனிதரிடமும் அவரிடம் இல்லாத ஒன்றை கேட்பது நாகரீகம் அன்று என்பது எங்களுக்குத் தெரியும் . திருடர்களின் நிலத்திற்கு வந்துள்ள உங்களுக்கு ஒரிய எழுத்தாளர் சுரேந்திர மஹாந்தி எழுதிய ‘நீலமலை” என்கிற நூலைப் பரிசளிக்க விழைகிறோம். விவேகானந்தர் பாறையின் அமைதியான, தனித்த சூழலில் அந்நூலினைப் படிக்க முயலுங்கள்.

சாகித்ய அகாதமி விருது பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான சுரேந்திர மஹாந்தி எழுதிய நூலினை சாகித்ய அகாதமி விருது பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசனாகிய நான் இதைப் பரிந்துரைப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் யாரைத் திருடர்கள் என்று கூறினீர்களோ அந்தக் கூட்டத்தின் சார்பாக, திருடு போனதாக நீங்கள் சொன்ன பொருள் பற்றிய பூர்வீக ஆவணம் ஒன்றை உங்களிடம் ஒப்படைக்கிறோம். ஆம், இந்த நூல் ஜகந்நாதர் கோயிலையும் அதனுடைய பொக்கிஷத்தையும் பற்றியது. நல்லவனுக்குப் பரிசாகவும் தீயவனுக்குத் தண்டனையாகவும் விளங்கும் ஆற்றல் நூற்களுக்கு உண்டு. விவேகானந்தருக்கும் எங்களுக்கும் உடன்பாடுள்ள இந்தக் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடு இருக்குமாயின் இதனைப் படித்து பாருங்கள்.

ஒரியாவின் ஒவ்வொரு உயிரிலும் ஜகந்நாதரின் ஈடுபாட்டுக்கென ஓர் இடம் உண்டு என்பதை முழுமுற்றாக நம்பும் ஒரியாவின் மைந்தனான சுரேந்திர மஹாந்தியின் எழுத்தை வாசியுங்கள்.

கங்கை முதல் கோதாவரி வரை பரந்து விரிந்த உத்கல சாம்ராஜ்யத்தின் நிரந்தர அதிபதியாக ஒரிய மக்களால் காலமெல்லாம் போற்றப்படும் ஜகந்நாதரின் பொக்கிஷ அறையின் சாவியை மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கூத்தப்பன்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஒருவரால் திருடப்பட்டதாகக் கூறுவது ஆன்மீகமா? அரசியலா? அல்லது அருவருப்பா?

“திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு?” - மோடியின் தியானத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்!

இதற்கும்மேல் பகவான் ஜகந்நாதர் உங்களின் பக்தர் என்கிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். இரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்கள் திருடர்களாக்கப்பட்டார்கள். தெய்வங்கள் உங்களின் பக்தர்களாக்கப்பட்டார்கள். இப்பொழுது விவேகானந்தர் பாறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் 45 மணி நேர தியானத்திற்கு பின் உங்கள் விசுவாசிகள் விவேகானந்தரை என்ன சொல்லப் போகிறார்களோ என்ற பதட்டம் தேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.

பகவானே உங்களின் பக்தராக்கப்பட்ட பின் பரமஹம்சரின் எளிய சீடனுக்கு எந்த இடம் மிச்சமிருக்கப் போகிறது? இந்து பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தை எடுத்து இஸ்லாம் பெண்களுக்கு எதிர்கட்சிகள் கொடுத்துவிடுவார்கள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்பவர்கள், ஊடுருவல்காரர்கள் என்றெல்லாம் பேசிவிட்டுத்தான் தியான மேடைக்கு வந்திருக்கிறீர்கள். இங்கு வந்த உங்களிடம் சுரேந்திர மஹாந்தியின் நூலினை பரிந்துரைப்பதற்கு காரணம் உண்டு.

ஜகந்நாதரின் மரியாதையைக் காக்கும் பொருட்டு சொல்லவொன்னாத் துயரத்தைச் சந்திக்கும் ஹாபிஸ் காதர் என்கிற இஸ்லாமிய அரசனின் போராட்டமே இந்நூல். நீங்கள் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் இந்தியா மீளும் என்பதற்கு எங்களின் வேர்களே சான்று. நீங்கள் விஷத்தை தெளித்தாலும் விழுங்கி எழும் ஆற்றல் எம்மண்ணுக்கு உண்டு. எல்லா மார்க்கத்திலும் மனதை ஒருமுகப்படுத்தும் செயல்முறை உண்டு.மனதை ஒருமுகப்படுத்தலே தியானம்.

ஆனால் எதில் என்ற கேள்வியில்தான் ஆன்மீகமும் அரசியலும் அடங்கியுள்ளது. நீங்கள் செய்துமுடித்து வந்துள்ள தேர்தல் பரப்புரைகளின் வழியே உங்கள் மனமும் சிந்தனையும் என்னவாக உள்ளது என்பதை நாடறிந்துள்ளது. நீங்கள் பேசிய எல்லாவற்றிலிருந்தும் தேசத்தைத் திசைதிருப்ப தியானம் பயன்படலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அதில் தோல்வியே அடைவீர்கள்.

தியாகமும் தியானமும் விளம்பரத்தின் பொருட்டு அமையுமேயானால் அச்செயலுக்கு விவேகானந்தர் சூட்டும் பட்டத்தை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. “இதுவரை இருந்த பிரதமர்களிலே அப்பதவிக்கான தகுதியை மிகவும் தாழ்த்தியவர்” நீங்கள் என மன்மோகன்சிங் சொன்னதை மேலும் தாழ்த்த விவேகானந்தரைச் சான்றாக்க விரும்பவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories