நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அங்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் நேற்று (25.03.2024) செய்தியாளரை சந்தித்த அண்ணாமலை, "கோவையில் வெப்பம் அதிகரிப்பு காரணம் திராவிட அரசுகள்தான்" என்று கூறினார்.
இவரது பேச்சு வழக்கம்போல் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு கண்டெண்டாக மாறியுள்ள நிலையில், பலரும் இவரது பேச்சுக்கு பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இவரது பேச்சு, அடிப்படை அறிவில்லாதது என்று கூறியுள்ளார்.
அதாவது தென் சென்னை தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜகவினர் தேர்தல் பிரசாரங்களில் அடிப்படை அறிவு கூட இல்லாமல் பல உளறல்களை கொட்டி வருகின்றனர்.
நேற்று கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், 'திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் 1 டிகிரியில் இருந்த 2 டிகிரியாக வெப்பம் அதிகரித்து உள்ளதாக, அடிப்படை அறிவு கூட இல்லாமல் மக்களிடம் பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
அதே போல், பாஜகவை சேர்ந்த நடிகர் சரத்குமார் சூரியவம்சம் படத்தில் தேவயானி எப்படி கலெக்டர் ஆக்கினேனோ அதேபோல தன்னுடைய மனைவியான ராதிகாவை வேட்பாளராக ஆக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு சமூக வலைத்தளங்களில் தற்போது நடிகை தேவயானி எந்த ஊரில் கலெக்டராக இருக்கிறார் என நகைச்சுவையாக சமூக வலைத்தளங்களில் தற்போது வவம் வந்து கொண்டிருக்கிறது.
இதுபோல நகைச்சுவையாகவும் அடிப்படை அறிவு இல்லாமல் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவினர் பேசி வருகின்றனர். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தொலைக்காட்சியிலும் சமூக வலைத்தளங்களில் இது போன்ற பல்வேறு நகைச்சுவைகளை நாம் பார்க்க வேண்டியதாக உள்ளது." என்றார்.